கிண்ணியா நகரசபையின் எல்லை மீளமைக்கப்பட வேண்டும்! - சிறப்புக் கட்டுரை
கிண்ணியா பிரதேச சபையில் இருந்து புதிதாக நகர சபை ஒன்றை உருவாக்குவது தொடர்பாக ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிப்பதற்காக மாகாணசபைகள் மற்றும் உள்ளுராட்சி அமைச்சினால் கடந்த 2003ஆம் ஆண்டு குழுவொன்று அமைக்கப்பட்டது. இக்குழுவுக்கு பொதுநல அமைப்புகள், அப்போதைய பாராளுமன்ற உறுப்பினர்கள் வழங்கிய எழுத்து மூல மற்றும் நேரடி சாட்சியங்களின் அடிப்படையில் உருவாக்கப்பட்டது தான் கிண்ணியா நகரசபையாகும்.
இதன்படி கிண்ணியா பிரதேச செயலகப் பிரிவுக்குள் வரும் 31 கிராம உத்தியோகத்தர் பிரிவுகளில் 17 கிராம உத்தியோகத்தர் பிரிவுகள் நகரசபைக்குள்ளும், 14 கிராம உத்தியோகத்தர் பிரிவுகள் பிரதேச சபைக்குள்ளும் கொண்டு வரப்பட்டது.
றஹ்மானியாநகர், சின்னக்கிண்ணியா, கட்டையாறு, மாஞ்சோலை, மாஞ்சோலைச்சேனை, மஹ்ரூப்நகர், அண்ணல்நகர், பைசல்நகர், ஈச்சந்தீவு, ஆலங்கேணி, இடிமண், குட்டிக்கராச்சி, கிண்ணியா, பெரிய கிண்ணியா, மாலிந்துறை, எகுத்தார்நகர், பெரியாற்றுமுனை ஆகிய 17 கிராம உத்தியோகத்தர் பிரிவுகளே நகரசபைக்குள் வருகின்றன.
கிண்ணியா நகரசபைக்கு தவிசாளர், பிரதித்தவிசாளர் உட்பட 7 உறுப்பினர்களைத் தெரிவு செய்வதற்கான முதலாவது தேர்தல் கடந்த 2006 ஆம் ஆண்டு நடைபெற்றது.
இதன்படி ஐக்கிய தேசியக்கட்சி – முஸ்லிம் காங்கிரஸ் கூட்டணியில் 4 உறுப்பினர்களும், ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் 2 உறுப்பினர்களும், இலங்கை தமிழரசுக் கட்சியில் 1 உறுப்பினரும் தெரிவாயினர்.
2011ஆம் ஆண்டு நடைபெற்ற 2வது தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திரக்கூட்டமைப்பில் 5 பேரும், ஐக்கிய தேசியக் கட்சியில் ஒருவரும், சுயேட்சைக் குழுவில் ஒருவரும் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.
கடந்த நான்கு வருடங்களாக கிண்ணியா நகரசபை இயங்கி வருகின்றது. உப்பாறுத்துறை முதல் றஹ்மானியா நகர்வரையும், கொட்டியாரக்குடா முதல் குறிஞ்சாக்கேணி ஆறு வரையும் உள்ள பகுதிக்குள் உள்ளடங்கும் 17 கிராம உத்தியோகத்தர் பிரிவுகளே இந்நகரசபைக்குள் வருகின்றன.
கிண்ணியாவின் 152 சதுர கிலோ மீற்றர் பரப்பளவுக்குள் நகரசபையின் பரப்பளவு சுமார் 10 சதுர கிலோமீற்றர்கள் மட்டுமேயாகும். பெரும்பாலும், நகரத்தை அண்டிய பகுதிகளே இதற்குள் அடங்குகின்றன. ஏனைய பாரிய நிலப்பரப்பு பிரதேச சபைக்குள் அடங்குகின்றன.
கடந்த நான்கு வருட காலத்துக்குள்ளும் நகரசபை எதிர்நோக்கிய பிரச்சினைகளுள் பிரதானமானது அபிவிருத்தித் தேவைக்கு அரச காணியில்லாப் பிரச்சினையாகும். பின்வரும் அபிவிருத்தித் தேவைகளுக்கு நகரசபைக்கு காணி அவசியமாகின்றது.
1. மாடு, ஆடு அறுப்பதற்கான மடுவம் நிர்மானிக்க
2. நகரசபை பகுதியின் திண்மக்கழிவுகளை அகற்ற
3. நகரசபை பகுதியின் மலசல கழிவுகளை அகற்ற
4. அரச வங்கிகளுக்கு நிரந்தரக்கட்டடம் அமைக்க
5. பஸ் நிலையம் (டீரள ளவயனெ) அமைக்க
6. மின்சாரசபைக் காரியாலயம் அமைக்க
7. 400 மீற்றர் மைதானம் அமைக்க
8. சொப்பிங் கொம்ப்லக்ஸ் அமைக்க
9. இது போல இன்னும் பலவற்றுக்கு…..
இவற்றுள் முதல் மூன்றும் நகரசபைக்கு பாரிய தலையிடியாக தற்போது மாறியுள்ளது. இதற்கான காணி நகரசபைக்குள் இல்லை. எனவே, பிரதேச சபையின் எல்லைக்குள் உள்ள இடங்களையே இதற்காக பயன்படுத்த வேண்டிய நிர்ப்பந்தம் நகர சபைக்கு ஏற்பட்டுள்ளது. இது இரண்டு சபைகளுக்கும் இடையில் சில முரண்பாடுகளையும் தோற்றுவித்துள்ளது.
இந்தப் பிரச்சினை நீண்ட காலத்தில் இன்னும் பாரிய சிக்கல்களை நகரசபைக்குத் தோற்றுவிக்கும் சாத்தியம் உள்ளது. ஆகையால் இது எதிர்கால சமுதாயத்திற்கு பாரிய பிரச்சினையை விட்டுச் செல்வதாகவும் இருக்கும்.
நகரசபையொன்றை எப்படியாவது பெற்றுக் கொள்ளவேண்டும் என்ற எண்ணமே அக்கால கட்டத்தில் மேலோங்கி நின்றதால் இப்போது எதிர்நோக்கப்படும் பிரச்சினை குறித்து அப்போது சிந்திக்கப்பட வில்லை.
இப்பிரச்சினைக்கு தீர்வாக பின்வரும் ஆலோசனை கவனத்தில் கொள்ளப்பட்டால் இதற்கு ஓரளவு பரிகாரம் காணமுடியும்
அதாவது உடனடியாக கிண்ணியா நகர சபையின் எல்லைகள் மீளமைக்கப்பட வேண்டும். அதன் மூலம் கிண்ணியா பிரதேச சபையின் வசமிருக்கும் குறைந்தது ஒரு கிராம உத்தியோகத்தர் பிரிவையாவது நகரசபைக்குள் உள்வாங்க வேண்டும்.
இப்படி உள்வாங்குவதற்கு மிகவும் பொருத்தமானது உப்பாறு கிராம உத்தியோகத்தர் பிரிவுதான். இதற்கு சாதகமான காரணங்களாக பின்வருவனவற்றைக் குறிப்பிடலாம்.
1. கிண்ணியா நகர சபையின் எல்லையில் அமைந்துள்ள பிரிவு இது.
2. கூடுதல் நிலப்பரப்பளவு கொண்ட பிரிவு
3. அதிக அரச காணிகளைக் கொண்ட பிரிவு
இப்படி உப்பாறு கிராம உத்தியோகத்தர் பிரிவு நகரசபைக்குள் உள்வாங்கப்படுமாயின் கிண்ணியா நகரில் உள்ள சில பொருத்தமான காணிகளை மேற்படி தேவைகளுக்காக சுவீகரித்து அதற்குப் பொருத்தமான மாற்றுக் காணிகளை உப்பாறில் வழங்கவும் முடியும்.
தற்போது உப்பாறுப் பாலம் நிர்மாணிக்கப்பட்டுள்ளதால் மடுவம், திண்மக்கழிவு அகற்றல், மலசல கழிவுகள் அகற்றல் போன்றவற்றுக்குத் தேவையான காணிகளையும் உப்பாறில் ஒதுக்கிக் கொள்ள முடியும்.
இப்படியான வாய்ப்பு நகர சபையின் எல்லையில் இருக்கும் வேறு கிராம உத்தியோகத்தர் பிரிவுகளில் இல்லாததால் உப்பாறுவே இதற்குப் பொருத்தமான கிராம உத்தியோகத்தர் பிரிவாகும்.
எனவே, இந்த விடயத்தை பாராளுமன்ற உறுப்பினர், மாகாணசபை பிரதிநிதிகள், நகரசபை பிரதேச சபையின் தவிசாளர்கள் மற்றும் உறுப்பினர்கள் கவனத்தில் எடுக்க வேண்டும். சமூகத்திலுள்ள நலன் விரும்பிகள், ஆர்வலர்கள் சிந்தனைக்கு எடுக்க வேண்டும். தேவைப்படின் சமூகத்திலுள்ள துறைசார்ந்தவர்களின் ஒத்துழைப்பைப் பெற்று இந்த விடயம் முன்னெடுக்கப்பட வேண்டும்.
இன்றேல் எதிர்கால சமூகத்திற்கு பாரிய பிரச்சினைகளை விட்டுச் சென்ற ஒரு சமூகம் என்ற பழியையும், பாவத்தையும் நாம் அனைவரும் சுமக்க வேண்டும் என்பதில் எவ்வித ஐயமுமில்லை.
- A.C.M. Mussil -
KinniyaNET Live Radio



Comments
RSS feed for comments to this post