Thursday, 28, Sep, 1:08 PM

 

 
 
திறந்த போட்டிப் பரீட்சை மூலம் தெரிவான கிண்ணியாவின் முதலாவது வெளிநாட்டுச் சேவையாளர் ஜனாப். ஏ.எல். முகம்மது லாபிர் அவர்களாவர். இவர் மர்ஹூம் அப்துல் லெத்தீப் (ஓய்வு பெற்ற தபால்காரர்) – பாத்தும்மா தம்பதியரின் தவப் புதல்வராக 1957.05.01 இல் குட்டிக்கரச்சையில் பிறந்தார்.
 
தனது ஆரம்பக் கல்விக்காக 1963 இல் பெரிய ஆண்கள் வித்தியாலயத்தில் சேர்ந்தார். இவர் கற்கும் காலத்தில் இப்பாடசாலையும் கிண்ணியா முஸ்லிம் மகளிர் மகா வித்தியாலயமும் ஒரே காணியில் நடுவில் வேலியிடப்பட்ட நிலையில் இயங்கி வந்தன. 7ஆம் தரம் வரை இங்கு கற்ற இவர் பின்னர் கிண்ணியா மத்திய கல்லூரியில் சேர்ந்தார்.
 
கிண்ணியா மத்திய கல்லூரியிலேயே க.பொ.த சாதாரணதர மற்றும் உயர்தரப் பரீட்சைகளுக்குத் தோற்றினார். இவர் சாதாரண தரப் பரீட்சையில் 8 பாடங்களிலும் திறமைச் சித்தி பெற்றார். அக்காலத்தில் இப்படி எல்லாப்பாடங்களிலும் திறமைச்சித்தி பெற்ற முதல்வராக இவர் திகழ்ந்தார்.
 
1979 ஆம் ஆண்டு இவருக்கு ஆசிரியர் நியமனம் கிடைத்தது. கிண்ணியா மத்திய கல்லூரி, திருகோணமலை ஸாஹிராக் கல்லூரி, வெள்ளைமணல் அல் அஸ்ஹர் மகா வித்தியாலயம். கந்தளாய் அல் தாரிக் மகா வித்தியாலயம், முள்ளிப்பொத்தானை அல்ஹிக்மா மகா வித்தியாலயம் ஆகிய பாடசாலைகளில் இவர் ஆசிரியராகக் கடமையாற்றியுள்ளார்.
 
பேராதனைப் பல்கலைக்கழகத்தின் உள்வாரி மாணவராக நுழைந்த இவர் 1986 ஆம் ஆண்டு விவசாய விஞ்ஞானமானிப் பட்டத்தைப் பெற்றார். அதேபோல இலங்கை சட்டக்கல்லூரியில் கற்ற இவர் 1995 இல் சட்டத்தரணியானார்.
 
இலங்கை வெளிநாட்டுச் சேவை திறந்த போட்டிப் பரீட்சைக்குத் தோற்றிய இவர் அதில் சித்தியடைந்து 1994 இல் இலங்கை வெளிநாட்டுச் சேவை அதிகாரியானார். இந்த வகையில் கிண்ணியாவிலிருந்து திறந்த போட்டிப் பரீட்சை மூலம் இலங்கை வெளிநாட்டுச் சேவையுள் நுழைந்த முதலாமவர் என்ற பெருமையை இவர் பெறுகின்றார்.
 
1995 ஆம் ஆண்டு முதல் 2015 ஆம் ஆண்டு வரை குவைத், லெபனான், கனடா, ஐக்கிய அறபு இராச்சியம், சவூதி அரேபியா, தாய்லாந்து ஆகிய நாடுகளில் உள்ள இலங்கைத் தூதரகங்களில் உயர் அதிகாரியாகக் கடமையாற்றியுள்ளார்.
 
2015 முதல் 2019 ஆகஸ்ட்டில் ஓய்வு பெறும்வரை ஜோர்தானுக்கான இலங்கைத் தூதுவராகக் கடமையாற்றினார். இந்த வகையில் கிண்ணியாவிலிருந்து வெளிநாட்டுத் தூதுவராக கடமையாற்றிய முதல் துறைசார் அதிகாரி என்ற பெருமையையும் இவர் பெறுகின்றார்.
 
இவர் இளைஞராக இருந்த காலத்தில் அரசியல் ஈடுபாடுள்ள ஒருவராக இருந்தார் முன்னாள் இராஜாங்க அமைச்சர் மர்ஹூம் எம்.ஈ.எச்.மகரூப் அவர்களோடு நெருக்கமான உறவைப் பேணி வந்த இவர் ஐக்கிய தேசியக் கட்சியின் பெரிய கிண்ணியா 4 ஆம் வட்டார கிளைச் செயலாளராக பணியாற்றியுள்ளார். ஐக்கிய தேசியக் கட்சியின் உத்தியோகபூர்வ இதழான நம்தேசம் பத்திரிகையின் விநியோகஸ்தராகவும்  செயற்பட்டுள்ளார்.
 
பின்னர் முஸ்லிம் காங்கிரஸில் இணைந்து கொண்ட இவருக்கு மர்ஹூம் எம்.எச்.எம்.அஷ்ரப் அவர்களோடு நெருங்கிய உறவு இருந்தது. அக்காலத்தில் பல்கலைக்கழகத்தில் அதன் கொள்கை பரப்புச் செயலாளராகச் செயற்பட்டுள்ளார். அதேபோல 1992- 1994 காலப்பகுதியில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் மர்ஹூம் என்.எம்.புகார்தீன் அவர்களது பிரத்தியேக ஆளணியில் இணைந்து செயற்பட்டுள்ளார்.
 
இவர் பல்வேறு சமூகப் பணிகளிலும் ஈடுபட்டு வருகின்றார். சுனாமி காலத்தில் கிண்ணியாவில் கட்டப்பட்ட முதல் தனி வீடுகள் மூன்று இவரது முயற்சியால் கட்டப்பட்டன. அவற்றில் இரண்டு பெரியாற்றுமுனைப் பகுதியிலும், ஒன்று குறிஞ்சாக்கேணிப் பகுதியிலும் நிர்மாணிக்கப்பட்டுள்ளன. 
 
இவரால் பலன்பெற்ற பெற்ற பாடசாலைகள் பல. அனேகமான பாடசாலைகள் ஏதோ ஒரு வகையில் இவரால் நன்மை பெற்றுள்ளன. 2008 இல் முனைச்சேனை சுமையா மகளிர் அறபுக் கல்லூரிக்கு இஸ்லாமிய அபிவிருத்தி வங்கியிலிருந்து 142,000 அமெரிக்க டொலர் நிதியுதவி பெற்றுக் கொடுத்துள்ளார். 
 
கிண்ணியாவில் டெங்கு பாதிப்பு ஏற்பட்டிருந்த காலப்பகுதியிலும் தன்னால் முடியுமான உதவிகளைச் செய்துள்ளார்.
 
க.பொ.த உயர்தர விஞ்ஞானப் பிரிவில் அகில இலங்கை ரீதியில் இரண்டாம் இடம்பெற்ற கிண்ணியாவைச் சேர்ந்த முகம்மது மஹ்தி – ரொசான் அக்தரையும், ஊடகவியலாளர் ஏ.டப்ளிவ்.முஜீபையும் ஜோர்தானுக்கு விருந்தினராக அழைத்து இவர் கௌரவித்துள்ளார். 
 
கலாபூசணம் ஏ.எம்.எம்.அலி அவர்களது 'குடையும், அடைமழையும்' நூல் வெளியீட்டுக்கு இவர் அனுசரணை வழங்கியுள்ளார்.
 
திருகோணமலை மாவட்டத்தின் முதல் ஜனாதிபதி சட்டத்தரணி ஏ.டப்ளிவ்.சத்தார் அவர்களுக்கும், கிண்ணியாவின் கலாநிதிகளுக்கும் கிண்ணியன் ரீவியின் ஊடக அனுசரணையுடன் பெரும் பாராட்டு விழாவை நடத்தினார்.
 
தற்போதைய கொரோனா காலத்தில் இன, மத பேதமற்ற முறையில் திருகோணமலை மாவட்ட மக்களுக்கு உலருணவுப் பொதிகளை வழங்கினார்.
 
கிண்ணியாவின் முதற் துணைப் பேராசிரியர் மர்ஹூம் கே.எம்.எச்.காலிதீன் அவர்களோடு நெருங்கிய உறவு இவருக்கு இருந்தது. இவரை அடிக்கடி நினைவுகூரும் இவர் தனக்கு பல்வேறு வழிகளில் அவர் ஆலோசனை வழங்கியுள்ளதாகக் குறிப்பிடுகின்றார். 
 
முகம்மது கரீம் - ஐனுன் றிபாயா இவரது துணைவியாவார். ஆசிரியையாகக் கடமையாற்றிய இவர் பின்னர் தனது பதவியைத் துறந்தார். ரொசான் லாபீர், அஹ்மத் யாசிர் லாபீர், ஆதில் லாபீர் ஆகியோர் இவரது புதல்வர்களாவர். இவர்கள் வெவ்வேறு நாடுகளில் தனியார் துறைகளில் பணிபுரிந்து வருகின்றனர்.
 
 
 
தேடல்:
ஏ.ஸீ.எம்.முஸ்இல்
 
 

Comment


 

Like us on Facebook (2)

 

Our Branding Partners